கிழக்கிலங்கையில் தொல்பொருள் வளங்களைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபாய நியமித்துள்ள செயலணி சிங்கள - பௌத்த தேசிய நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் வெளியாகியுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இந்தச் செயலணியில் சிறுபான்மையினத்தவர்கள் இடம்பெறாதது மிகவும் சிக்கலான விடயம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா. மதச் சுதந்தரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான விசேட அறிக்கையாளருக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
அது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
"கடந்த மே மாதம் பௌத்த ஆலோசனை சபையின் இரண்டாவது கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஆராய்வதற்கும் அவை அழிக்கப்படுகின்றன என வெளியான கரிசனை காரணமாக அவற்றைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தலைமையில் செயலணியொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இலங்கையில் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ தொல்லியல் பகுதிகள் தொடர்பாக வெளியாகி வரும் கரிசனைகளைக் கருத்தில்கொள்ளும்போது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தலைமையிலான ஜனாதிபதி செயலணி உள்நாட்டுப் போரின் ஆரம்பத்துக் காரணமாக இருந்த இந்த அரசியல் மயமாக்கப்பட்ட இன ரீதியான விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தலாம்.
ஜனாதிபதி இலங்கையின் தெரண நிறுவனத்தின் தலைவர் உட்பட 11 பேர் அடங்கிய செயலணியை நியமித்துள்ளார்.
தெரண என்ற வலதுசாரி ஊடக நிறுவனம் சிங்கள - பௌத்த உள்ளடக்கங்களை முன்னிறுத்துவது வழமை. இந்தச் செயலணியில் சிறுபான்மையினத்தவர்கள் இடம்பெறாதது மிகவும் சிக்கலான விடயம்.
ஊடக அறிக்கைகளும், விமர்சகர்களும் சிங்கள - பௌத்த தேசிய நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு இந்த ஜனாதிபதி செயலணி பயன்படுத்தப்படும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸின் பிடியில் உலகம் சிக்கியுள்ள தருணத்தில் முஸ்லிம் சமூகத்தினரையும் இலக்குவைத்து இலங்கை அரசு செயற்படுகின்றது" - என்று குற்றம்சாட்டியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை